

கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மவுண்ட் ரோடு பகுதியில் வனபத்ரகாளியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி இரவு மர்ம ஆசாமிகள் கோவிலின் பூட்டை உடைத்து, அங்குள்ள பொருட்களை திருடி செல்ல முயன்றனர்.
மறுநாள் காலையில் பூசாரி வழக்கம்போல் பூஜைகள் செய்வதற்காக கோவிலுக்கு வந்து பார்த்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் செயல் அலுவலர் ராஜேஷ்(32), சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.