

சிக்கமகளூரு,
தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா டவுன் ஆசரியா காலனியை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி சைத்ரா. இந்த தம்பதியின் மகள் சாத்னா(வயது 7). இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் சிறுமி சாத்னா தினமும் பள்ளிக்கு சென்று வந்தவுடன், வீட்டில் டி.வி.யில் நந்தினி என்ற கன்னட தொடரை பார்த்து வந்தாள். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நந்தினி தொடரில் நடிகை கையில் ஒரு தாளில் தீ வைத்து நடனமாடியதாக தெரிகிறது.
இதனை பார்த்த சாத்னாவும், அந்த நடிகையை போல கையில் ஒரு பேப்பரை எடுத்து கொண்டு தீ வைத்துவிட்டு நடனமாடியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக சாத்னாவின் உடலில் தீப்பிடித்தது. இதனால் அவள் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தாள். அவளின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து சாத்னா உடலில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனாலும் சாத்னாவின் உடல் கருகியது.
இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த சாத்னா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் குறித்து ஹரிஹரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். டி.வி. தொடரில் வந்தது போல் தீயுடன் நடனமாடிய சிறுமி உயிரிழந்த சம்பவம் தாமதமாக தற்போது தான் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சாத்னாவின் தந்தை மஞ்சுநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், குழந்தைகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்க்க விடுவது தவறு. நான் எனது மகள் நந்தினி தொலைக்காட்சி தொடரை பார்ப்பதே கவனிக்க தவறி விட்டேன். எனது மகள் இறந்தது எனது மனதிற்கு வேதனை அளிக்கிறது. இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றார்.