

மதுரை,
சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை கைது செய்தனர்.
முன்னதாக உதித்சூர்யா தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் கைது செய்யப்பட்டதால், அவரது முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக மாற்றி விசாரிக்கப்படும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மனுதாரரின் தந்தை விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். இதனால் முக்கிய குற்றவாளிகளை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.
அப்படியானால், இந்த விஷயத்தில் மனுதாரரின் தந்தைதான் வில்லனா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு உதித்சூர்யாவின் வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க பரிசீலிக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைக்காமல், உண்மையை மறைக்க பார்ப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.பின்னர் அரசு வக்கீல், மனுதாரரின் தந்தை ஜாமீன் கேட்ட மனு தேனி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் தந்தை ஜாமீன் கேட்ட மனு தேனி மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த மனுவை இந்த மனுவுடன் சேர்த்து விசாரிக்க ஐகோர்ட்டு பதிவாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (17-ந்தேதி) தள்ளிவைத்தார்.