நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்ப உற்சவம்

நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்ப உற்சவம் நடந்தது.
நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்ப உற்சவம்
Published on

நெல்லை:

முன்னொரு காலத்தில் சைவ மதத்துக்கும் சமண மதத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமண மதத்தினர், சைவ சமயக் குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியினை பரிசோதிக்கும் பொருட்டு அவரை கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். அப்போது அப்பர் பெருமான் "கற்றுனண பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயே" என்று சிவனை நினைத்து பாடினார். அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது.

இதன் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளின் சிறப்பை உலகிற்கு உணர்த்தி, இறைவனின் திருக்காட்சி பெற்றார் என்ற தத்துவம் விளக்கப்படுகிறது. அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த வரலாற்றிற்கிணங்க, பாடல் பெற்ற சைவ சமய தலமான நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகம் அன்று வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கோவில் பொற்றாமரை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வந்தார். அங்குள்ள தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com