49 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை முதன்மை செயலாளர் பேட்டி

தமிழகத்தில் 49 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்றும், படித்தவர்கள் தான் இதில் அதிகம் உள்ளதாக திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
49 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை முதன்மை செயலாளர் பேட்டி
Published on

திருச்சி, ஏப்.10-
தமிழகத்தில் 49 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்றும், படித்தவர்கள் தான் இதில் அதிகம் உள்ளதாக திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று காலை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திருச்சி மருத்துவமனையில் சிறுநீரகம் தானம் பெற்று சிகிச்சை பெற்று வரும் நோயாளியை பார்த்து நலம் விசாரித்தார். அத்துடன், அவருடைய மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை சந்தித்த அவர், அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
டாக்டர்களுக்கு பாராட்டு
திருச்சி அரசு மருத்துவமனையில் 55 வயதில் மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானம் பெற்று மற்றவர்களுக்கு பொருத்தி உள்ளனர். திருச்சியில் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தவர்களுக்கும், அதை பெற்று வெற்றிகரமாக தானம் கொடுத்த டாக்டர்களுக்கும் எனது பாராட்டுக்கள். திருச்சியில் இது 2-வது முறையாகும். தமிழகத்தில் 6,640 பேர் சிறுநீரகத்துக்காகவும், 314 பேர் கல்லீரலுக்காகவும், 40 பேர் இதயத்துக்காகவும், 24 பேர் கைகள் போன்ற உடல் உறுப்புகளுக்காகவும் காத்து இருக்கின்றனர்.
உடல் உறுப்பு தானத்தை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தான் முதலில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அந்த உறுப்புக்கான தேவை இல்லாத பட்சத்தில் தான் இந்திய அளவில் வழங்கப்படும். அதற்கு பிறகு கடைசி வாய்ப்பாகத்தான் வெளிநாட்டினருக்கு தானம் அளிக்கிறோம்.
2-வது அலையில்...
கொரோனோ கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. 2-வது அலையில் 3 லட்சம் பேர் வரை படுக்கையில் இருந்தனர். ஆனால் இன்று முழுவதும் குறைந்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசிகள் தான். 92 சதவீதம் பேர் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தியதால்தான் 3-வது அலையில் இறப்பு இல்லாமல் இருந்தது.
இதுவரை தமிழகத்தில் எக்ஸ்இ போன்ற உருமாறி வரும் கொரோனா வைரஸ் தொற்று போல் ஏதும் இல்லை. பிஏ2 ஒமைக்ரான் வகை தான் தமிழகத்தில் உள்ளது.
1.37 கோடி பேர்
மரபியல் ரீதியாக நாங்கள் தொடர்ந்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம். சர்வதேச விமான நிலையத்தில் 2 சதவீதம் என்ற அளவில் தோராயமாக பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் 1 கோடியே 37 லட்சத்து 90 ஆயிரத்து 725 பேர் 2-வது தடுப்பூசியும் செலுத்தவில்லை. 49 லட்சத்து 2 ஆயிரத்து 501 பேர் முதல் தடுப்பூசி கூட போடாமல் உள்ளனர்.
மலைவாழ் மக்கள் கூட தடுப்பூசி செலுத்தி ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். ஆனால் படித்தவர்கள் தடுப்பூசி போட ஒத்துழைக்காதது தான் வேதனை அளிக்கிறது.
இவ்வாறு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
செவிலியர்கள் பற்றாக்குறை
இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவமனை டீன் வனிதா, கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். பேட்டி முடிந்ததும், செவிலியர் சங்கத்தினர், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 1000 செவிலியர்களுக்கு 300 பேர் மட்டுமே இருப்பதாகவும் எனவே காலிப்பணியிடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் முதன்மை செயலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com