

கரூர்,
வேலை வாங்கி தருவதாக..
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள திருமாணிக்கம் பட்டியை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 22). அதே ஊரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (23). இவர்கள் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திலீப்குமாரிடம், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனி ஒன்றில் வேலை காலியாக உள்ளதாகவும், அந்த வேலையை வாங்கி தருவதற்கு, ரூ.3 லட்சம் செலவாகும் என சதீஷ்குமார் கூறியுள்ளார்.
வாலிபர் கைது
இதனையடுத்து திலீப்குமார், சதீஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் சதீஷ்குமாரின் நண்பர் ரகுபதி என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.80 ஆயிரம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து திலீப்குமாரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்க வைத்துள்ளனர். ஆனால் வேலைவாங்கித்தராமல் ஏமாற்றி உள்ளனர்.
இதுகுறித்து திலீப்குமார் கரூர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிந்து, வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் வாங்கி மோசடி செய்த சதீஷ்குமாரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள ரகுபதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.