வசந்தகுமார் எம்.பி. மறைவு: மார்த்தாண்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து மவுன ஊர்வலம் - 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மார்த்தாண்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து மவுன ஊர்வலம் நடந்தது. இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
வசந்தகுமார் எம்.பி. மறைவு: மார்த்தாண்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து மவுன ஊர்வலம் - 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
Published on

களியக்காவிளை,

குமரி மேற்கு மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வசந்தகுமார் எம்.பி.க்கு இரங்கல் தெரிவித்து குழித்துறையில் இருந்து மார்த்தாண்டம் வரை மவுன ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை 5 மணியளவில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு போன்ற மதசார்பற்ற கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் குழித்துறை அண்ணா சிலை அருகே கூடினர். அங்கிருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக வசந்தகுமார் எம்.பி.யின் மகன்கள் நடிகர் விஜய் வசந்த், வினோத் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் குழித்துறை சந்திப்பில் இருந்து தொடங்கி வெட்டுமணி, மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக சென்று மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு முடிந்தது. அங்கு வசந்தகுமார் எம்.பி.யின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது.

ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டத்தில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மனோதங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், குழித்துறை நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், நிர்வாகிகள் ஜோசப் தயாசிங், ரவிசங்கர், குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பொன். ஆசைத்தம்பி, பைங்குளம் பேரூர் தி.மு.க. செயலாளர் அம்சி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், துணை செயலாளர் சுரேஷ்குமார், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட தலைவர் ஜெயன், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், வட்டார தலைவர் ஜெகன்ராஜ், மாவட்ட செயலாளர் லாரன்ஸ், மாவட்ட கவுன்சிலர் செலின்மேரி, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ஏசுராஜா மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவரும் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்த நிலையில் பங்கேற்றனர்.

ஊர்வலம் குழித்துறையில் இருந்து மார்த்தாண்டம் வரை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக நடந்தது. இதனால், வாகனங்களை பாலத்தின் மேல் பகுதி வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.

இதேபோல் வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் தக்கலையில் மவுன ஊர்வலம் நடந்தது. அரசு மருத்துவமனை முன்பு இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கல்குளம் தாலுகா அலுவலகம் வரை சென்றது. கொட்டும் மழையில் நடந்த இந்த ஊர்வலத்துக்கு பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார் தலைமை தாங்கினார்.

தி.மு.க. நகர செயலாளர் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் ராஜூ, மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் ராசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், மனோ தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வசந்தகுமார் எம்.பி. உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அருமனையில் நடந்த மவுன ஊர்வலத்திற்கு வட்டார தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் சங்கரன், கடையல் சுந்தர் எட்வின், ஜேசன் அஜின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் அருமனையில் தொடங்கி நெடியசாலை புண்ணியம் முழுக்கோடு வழியாக உத்திரம்கோடு சந்திப்பில் நிறைவடைந்தது. ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர் சாமுவேல் ஜார்ஜ் உரையாற்றினார். கிங்சிலி சாலமன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com