வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி
Published on

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அன்னை மரியாவின் பிறந்த நாள் விழா ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி, பெங்காலி உள்பட பல்வேறு மொழிகளில் தினமும் சிறப்பு திருப்பலியும், அன்னையின் திருச்சொரூப ஆசீர் நிகழ்ச்சியும் நடை பெற்றன. விழாவையொட்டி பேராலயம் மின் விளக்கு அலங்காரத்தில்ஜொலித்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்து தொடங்கி வைத்தார். அப்போது பேராலயத்தின் மணிகள் ஒலிக்க வண்ண மலர்கள் அலங்காரத்துடன் புனித ஆரோக்கியமாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் பேராலய முகப்பில் இருந்து புறப்பட்டது. அப்போது அங்கு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவேமரியா வாழ்க என கோஷமிட்டு பிரார்த்தனை செய்தனர். மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சம்மன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோற்பவமாதா, புனித உத்திரியமாதா ஆகிய 6 தேர்கள் மின் விளக்குகளின் அலங்காரத்துடன் அணிவகுத்து சென்றன. தேர்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வலம் வரும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

கடற்கரை சாலை வழியாக தேர் பவனி சென்று பேராலய முகப்பிற்கு வந்து அடைந்தது. பின்னர் புனித ஆரோக்கிய மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது. தேர்பவனியை வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் கூடியிருந்த அனைத்து பக்தர் களும் காணும் வகையில் அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் ஆலய வளாகத்தை சுற்றியிருந்த பக்தர்கள் தங்கள் நின்றிருந்த இடத்திலேயே தேர் பவனியை கண்டு களித்தனர்.

விழாவில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குதந்தைகள் ஜோதி நல்லப்பன், ஆரோக்கியசுந்தரம் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.

ஆரோக்கிய மாதா பிறந்த நாளான இன்று (வெள்ளிக் கிழமை) காலை கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணியளவில் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com