செல்போனில் ஆபாச படம் காட்டி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; அ.தி.மு.க. பிரமுகர் கைது

செல்போனில் ஆபாச படம் காட்டி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; அ.தி.மு.க. பிரமுகர் கைது

செல்போனில் ஆபாச படத்தை காட்டி, 13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Published on

பெரம்பூர்,

சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பாளையம் என்ற ரவி(வயது 68). அ.தி.மு.க. பிரமுகர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியிடம், செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ரவியை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து ரவி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக ரவி, அ.தி.மு.க. பிரமுகர் என்பதால் அவரை போலீசார் விடுவித்து விடுவார்கள் என்று சந்தேகம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கல்லறை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார், ரவியை கைது செய்து சிறையில் அடைப்போம் என்று உறுதி அளித்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com