ஆலங்குடி அருகே வாராப்பூரில் மனித ரத்தம் கலந்து பில்லி சோறு எறியும் வினோத திருவிழா

ஆலங்குடி அருகே வாராப்பூரில் மனித ரத்தம் கலந்து பில்லி சோறு எறியும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆலங்குடி அருகே வாராப்பூரில் மனித ரத்தம் கலந்து பில்லி சோறு எறியும் வினோத திருவிழா
Published on

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூரில் பூர்ணகலாம்பிகை, புஷ்பகலாம்பிகை உடனுறை பெரிய அய்யனார், பாலையடிகருப்பண்ண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்திருவிழாவையொட்டி மனித ரத்தம் கலந்து சோறு பிசைந்து, பில்லி சோறு எறிதல் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த 3 சிறுவர்களுக்கு கோவில் வழக்கப்படி இடுப்பில் இருந்த அருணாகயிற்றை அறுத்தனர். பின்னர் பரம்பரையாக உள்ள வழக்கப்படி ஒருவர் தொடையை கீறி அதில் இருந்து வந்த ரத்தத்தை அங்கு தயாராக இருந்த சோற்றில் கலந்து பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்தனர்.

திரளான பக்தர்கள்

பின்னர் 20-க்கும் மேற்பட்ட கோவில் பூசாரிகள் இந்த பில்லி சோற்றை எடுத்துக்கொண்டு காட்டு பகுதிக்கு சென்று வானை நோக்கி வீசினார்கள். இவ்வாறு வீசப்படும் பில்லி சோறு கீழே விழாது என்பது ஐதீகம். இந்த பில்லி சோறு தயாரித்து சுவாமிகளுக்கு படைக்கும் வரை அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த வேட்டி கூடாரத்தில் உள்ளே அமர்ந்து இருந்தான். இதில் வாராப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இந்த கோவிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு திருவிழாவின் போது, ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைகளை பலி கொடுத்துள்ளனர். அப்போது ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் குழந்தை இருந்து உள்ளது. அப்போது அந்த குழந்தையின் தாய் தனது குழந்தையை தனக்கு தரவேண்டும் எனக்கூறி மடி பிச்சை கேட்டு கதறி அழுதார். அப்போது அங்கு கடவுள் தோன்றி அந்த குழந்தையை பலி கொடுக்காமல், அதன் தொடையை கீறி ரத்தம் எடுத்து சோற்றில் பிசைந்து படைக்குமாறு கட்டளையிட்டு மறைந்து விட்டார்.

நேர்த்திக்கடன்

அன்றில் இருந்து குழந்தைகளை பலி கொடுக்காமல் அந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் ரத்தத்தை கலந்து பில்லி சோறு படைத்து வந்து உள்ளனர். பின்னர், கால போக்கில் குழந்தைக்கு பதிலாக அந்த குடும்பத்தில் உள்ள பெரிய நபரின் இரண்டு பக்க தொடையை கீறி ரத்தம் எடுத்து சோற்றில் பிசைந்து காட்டு பகுதியில் அந்த பில்லி சோற்றை எறிந்து நேத்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அந்த பில்லி சோறு கீழே விழாமல் சாமி படையலாக ஏற்றுக் கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com