காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் மோதலுக்கு காரணம் என்ன?

காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் மோதலுக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் மோதலுக்கு காரணம் என்ன?
Published on

காலாப்பட்டு

காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் மோதலுக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதிகள் மோதல்

புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகளுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு கைதிகள் உசேன் (வயது 25), பிரதீஷ் (21) ஆகியோரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. மாறி மாறி இருவரும் தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதலில் உசேனின் மண்டை உடைந்தது. பிரதீசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிக்சை பெற்று பிரதீஷ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். உசேனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மோதல் குறித்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

வில்லியனூரைச் சேர்ந்த பிரதீஷ் கொலைவழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் போக்சோ வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்ற உசேனும் இருந்தார். இருவரும் சிறையில் நண்பர்களாகவே பழகியுள்ளனர். மேலும் அவர்கள் சமையல் பணியையும் கவனித்து வந்தனர்.

நேற்று விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது உசேன், பிரதீசின் குடும்பம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீஷ் மினரல் வாட்டர் எந்திரத்தில் இருந்த இரும்பு குழாயை எடுத்து உசேன் தலையில் தாக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com