தனியார் கழிவறைகளை, பொது கழிப்பிடமாக மாற்ற எந்த சட்டம் அனுமதித்தது?

தனியாருக்கு சொந்தமான கழிவறைகளை பொதுக்கழிப்பிடமாக மாற்றுவதற்கான அனுமதியை எந்த சட்டம் உங்களுக்கு வழங்கியது என்று மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
தனியார் கழிவறைகளை, பொது கழிப்பிடமாக மாற்ற எந்த சட்டம் அனுமதித்தது?
Published on

மும்பை,

மும்பை ஐகோர்ட்டில் பல்வேறு பெட்ரோல் பங்க்குகளின் உரிமையாளர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் எங்களிடம் பெட்ரோல் பங்கில் உள்ள கழிவறையை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கூறினர்.

அதுமட்டும் இல்லாமல் பங்க்களில் உள்ள கழிவறைகளின் வெளியே பொதுக்கழிப்பறை என்று பலகையையும் மாட்டியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஓகா, ரியாஸ் இக்பால் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகளை கட்டுவது மாநகராட்சியின் கடமையாகும். இதை விட்டுவிட்டு தனியார் கழிவறைகளை பொதுகழிவறைகளாக மாற்றக்கூடாது. தனியார் பெட்ரோல் பங்க்குகளுக்கு சொந்தமான கழிவறைகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடுவதற்கு மாநகராட்சிக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

ஒருவரின் அனுமதியில்லாமல் அவருக்கு சொந்தமான சொத்துக்கு வெளியே பொதுசொத்து என்று பலகை மாட்டக்கூடாது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எந்த சட்டம் இந்த செயலுக்கு அனுமதி அளிக்கிறது என்பதை காட்டுங்கள்.

தூய்மை இந்தியா திட்டம் ஒருபோதும் அடுத்தவர்களின் சொத்துகளை அபகரிக்க அனுமதிக்கவில்லை. பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் அனுமதி இன்றி அவர்களின் கழிவறைகளுக்கு வெளியே பலகைகளை பொறுத்தக்கூடாது. எனவே பொறுத்தப்பட்டுள்ள பலகைகளை உடனடியாக அகற்றவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com