சாத்தான்குளம் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

சாத்தான்குளம் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
சாத்தான்குளம் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 1.20 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அதிரடியாக மீட்டு நடவடிக்கை எடுத்தனர்.

தனியார் ஆக்கிரமிப்பு

சாத்தான்குளம் அருகேயுள்ள புதுக்குளம் கிராமத்தில் நீதிமன்றத்திற்கு எதிரே 1.20ஏக்கர் அரசு நத்தம் புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தை அதே ஊரை சேர்ந்த ஒரு தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இ்ந்த இடத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முள்வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்து தனது பயன்பாட்டில் வைத்திருந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடமும் புகார் செய்யப்பட்டது.

கலெக்டர் உத்தரவு

இதைதொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மண்டல துணை தாசில்தார் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் பாலகங்காதரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், விஸ்வநாதன், சத்யராஜ், இசக்கி ராஜ் உள்பட வருவாய் துறையினர் அந்த பகுதிக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.

ரூ.1கோடி நிலம் மீட்பு

அங்கு தனிநபர் முள்வேலி போட்டு ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலத்தை, பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுத்தனர். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். மேலும் அரசுக்கு சொந்தமான இந்த இடத்தில் யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை சார்பில் அந்நிலத்தில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com