பூஞ்சைகளின் இயற்கை ராஜ்ஜியம்..!

பூஞ்சைகள் மட்டும் இல்லையென்றால், இந்த பூமியே இல்லை. என்ன, நம்ப முடியவில்லையா? அதுதான் உண்மை. பூஞ்சைகள் பற்றிய அசத்தலான தகவல்கள் இதோ...
பூஞ்சைகளின் இயற்கை ராஜ்ஜியம்..!
Published on

இயற்கை அன்னை திரைமறைவில் நடத்தும் ஏகப்பட்ட அற்புதங்களில் பூஞ்சைகளும் ஒன்று. அது ஒரு திரைமறைவு ராஜ்ஜியம். நாம் பார்க்கும் காளான்கள், பூஞ்சைகளின் பழம் போன்ற பாகமாகும். பூஞ்சைகள், பூமி முழுவதும் வியாபித்திருக்கின்றன. பூமியின் எல்லாப் பகுதி சூழலிலும் ஜீவிக்கும் அசாத்திய சக்தி பெற்றவை இவை. குளிர், பனி, வெயில் என எதுவும் இதற்கு பொருட்டில்லை! தாவரங்கள், மிருகங்கள் என்று அனைத்து உயிரினங்களின் மீதும் வளரும் இயல்புடையது பூஞ்சை. பல ஆண்டுகளாக பூஞ்சைகள், தாவர ராஜ்ஜியத்தில் வைக்கப்பட்டிருந்தன. பின்னர்தான், பூஞ்சைகள் தாவரத்தைவிட மிருகங்களுடன் அதிகளவு ஒத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, பூஞ்சைகள் தனி ராஜ்ஜியமாக பிரிக்கப்பட்டுள்ளன.

பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு 'பூஞ்சையியல்' (mycology) என்று பெயர். பூஞ்சைகளிடம் 'க்ளோரோபில்' எனப்படும் பச்சையம் கிடையாது. எனவே, தாவரங்களைப் போல் உணவைத் தானே தயாரித்துக்கொள்ள இவற்றால் முடியாது.

பூமியில் 15 லட்சம் முதல் 50 லட்சம் வகையான பூஞ்சை வாழ்கின்றன. கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய அளவிலிருந்து பல மைல் அளவு வரை பூஞ்சைகள் காணப்படுகின்றன. பூஞ்சைகள், கண்ணுக்குப் புலப்படாமல் ஒரு நூற் றாண்டு வரைகூட செயலற்று இருந்து விட்டு, பின் வளரும் திறனுடையவை. பூசணம் (அ) காளான்களாக விருத்தியடையும்போதுதான் அது நம் கண்ணுக்குப் புலப்படும். பூஞ்சைகள் உணவுக்காக மற்றவற்றைச் சார்ந்தே இருக்கும். சில பூஞ்சைகள், மண்ணிலிருந்து உணவை எடுத்துக்கொள்ளும். சிலவகை பூஞ்சைகள் பிற உயிரினங்களையோ, உயிரற்ற பொருளையோ உணவுக்காக சார்ந்திருக்கும். ஒட்டுண்ணிகளும் சிதை மாற்றம் செய்யும் உயிரினங்களும் பூஞ்சை ராஜ்ஜியத்தில் இடம் வகிக்கின்றன.

பூஞ்சை இனம் மட்டும் இல்லையென்றால் பூமியில் பல அடி உயரத்திற்கு கழிவுகள் நிரம்பியிருக்கும். குப்பைகள், வாடிய தாவர பாகங்கள், இறந்த மிருகங்கள் போன்றவை பூஞ்சைகளின் தாக்கத்தால் மறுசுழற்சி பெற்று வளமான மண்ணாக மாறிவிடும். நீர் நிலைகளில் வாழும் பூஞ்சைகள், அங்கு சேரும் குப்பைகள், கழிவு, எண்ணெய் போன்றவற்றை நொதித்து, நீர்நிலையை மற்ற உயிரினங்கள் வாழத் தகுதியுடையதாய் மாற்றும். இந்த வகையில் அனைத்து உயிரினங்களும் பூஞ்சைகளுக்கு கடன்பட்டிருக்கின்றன. எனவே, பூஞ்சைகளை 'பூமியின் சுற்றுச்சூழலின் முதுகெலும்பு' என்று கூறலாம்.

ஸ்போர்ஸ் (Spores) எனப்படும் வித்துகள் மூலம் பூஞ்சைகள் இனப்பெருக்கம் செய்யும். காளான், பூசணம் (Mold), ஈஸ்ட் ஆகியவை பூஞ்சைகளின் சில வகைகள். உலகின் மிகப்பெரிய உயிரினமான 'தேன் பூஞ்சை' (Honey fungus), அமெரிக்காவின் ஓரிகான் பகுதியில் காணப்படுகிறது. 2200 ஏக்கர் பரப்பளவில் படர்ந்துள்ள இந்த காளான் காலனி, 2400 ஆண்டுகள் பழமையானதாகும். இந்தக் காலனியை ஒற்றை உயிரினமாகக் கணக்கிட்டால் இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினமாகும். இதன் மொத்த எடை 605 டன்களாகும். உலகின் மிகப்பெரிய காளான், ஹைனன் தீவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 500 கிலோ.

காளான்கள் மனிதர்களுக்கு ஆரோக்கியமான சுவையான உணவாகும். பிரெட், கேக் ஆகிய உணவுத் தயாரிப்பில் ஈஸ்ட் பயன்படுகிறது. மதுபானங்கள், அமிலங்கள், சாஸ் வகைகள், சீஸ் ஆகிய தயாரிப்புகளிலும் பூஞ்சைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. சில பூஞ்சைகள், பெனிசிலின் போன்ற உயிர்காக்கும் மருந்துகள் தயாரிப்பில் உதவுகின்றன. பூஞ்சைகளில் தீமையும் உண்டு. தீய பூஞ்சைகள் உணவைப் பாழாக்குகின்றன. மனிதர்களிலும், தாவரங்களிலும் நோய்களை உண்டாக்குகின்றன. சில காளான்கள் மனிதனையே கொல்லக்கூடிய விஷம் கொண்டவை.

தாவரங்களின் உயிரணுக்களின் சுவர் செல்லுலோஸால் உருவானது. ஆனால், பூஞ்சைகளின் உயிரணு சுவர் 'கைட்டின்' எனப்படும் மூலப்பொருளால் உருவானது. இந்த கைட்டின் மிருகங்களின் கொம்பு, முடி, மேல் ஓடு போன்றவற்றில் காணப்படும். பூஞ்சைகளின் உயிரணுக்களும் மரபணுக்களும் தாவரங்களைவிட மிருகங்களுடன் ஒத்துப் போகின்றன. பூஞ்சைகளின் உயிருள்ள உடலின் பெயர் 'மைசீலியம்' (mycelium) எனப்படும். ஒரு மைசீலியம் என்பது ஒரு எலும்பின் அளவில் இருந்து பல ஏக்கர் பரப்பளவு வரை இருக்குமாம். ஒரே நாளில் இவை ஒரு கி.மீ. அளவு கூட வளருமாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com