ஜவுளிக்கடை ஊழியர்களை தாக்கி துணிகளுடன் தப்பிய வாலிபர் கைது

காரைக்காலில் ஜவுளிக்கடை ஊழியர்களை தாக்கி துணிகளுடன் தப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜவுளிக்கடை ஊழியர்களை தாக்கி துணிகளுடன் தப்பிய வாலிபர் கைது
Published on

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட பிரதான சாலையான பாரதியார் சாலையில், அன்சாரி என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், கடந்த 10-ந் தேதி இரவு காரில் வந்த மர்மஆசாமிகள் விலை உயர்ந்த சட்டை மற்றும் பேண்டுகளை எடுத்தனர். அதற்கு பணம் செலுத்த கடை ஊழியர்கள் பில் கொடுத்தபோது, கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி விட்டு துணிகளுடன் தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடை அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை வலை வீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் துணிக்கடை ஊழியர்களை தாக்கியது கும்பகோணத்தை அடுத்த சிவபுரத்தை சேர்ந்த பென்னிராஜ் (வயது 25) மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த அவரை காரைக்கால் போலீசார் மாறுவேடத்தில் சென்று சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை காரைக்கால் அழைத்துவந்து விசாரித்தனர்.

விசாரணையில் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இதுபோல் கைவரிசை காட்டியதும், போலீசில் சிக்காமல் நீண்ட நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்ததும் தெரியவந்தது. அவரது கூட்டாளிகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

--- --- ---

X

Daily Thanthi
www.dailythanthi.com