'கோட்' படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயுடன் நடிக்கும் விஜயகாந்த்


கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயுடன் நடிக்கும் விஜயகாந்த்
x
தினத்தந்தி 16 April 2024 9:13 AM GMT (Updated: 16 April 2024 12:35 PM GMT)

நடிகர் விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரையில் கொண்டு வருவதற்காக பிரேமலதாவிடம் அனுமதி பெற்றுள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.

சென்னை,

படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் புதிய போஸ்டர் வெளியாகியது. அதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரையில் கொண்டு வருவதற்காக பிரேமலதாவிடம் அனுமதி கேட்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. இதற்கு அவர் சம்மதமும் தெரிவித்து இருக்கிறாராம்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. செப்டம்பர் 5 -ம் தேதி ரிலீஸ் என அறிவித்த பின்பு படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் புரோமோஷனும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. ஆனால், படத்தில் அறிவிக்கப்படாத இரண்டு சர்ப்ரைஸைகளை படக்குழு வைத்திருந்தது. அதில் ஒன்று, நடிகை த்ரிஷா விஜயுடன் கேமியோ ரோலில் நடிப்பதோடு ஒரு பாடலுக்கும் நடனமாடுகிறார் என்பது. மற்றொன்று, மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் படத்தில் நடிக்க வைக்க இருப்பது.

இதற்காக அனுமதி வாங்குவதற்காக இயக்குநர் வெங்கட்பிரபு, விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை சந்தித்து இருக்கிறார். பிரமேலதா உடனே சம்மதம் தெரிவித்த நிலையில், "கேப்டன் உயிரோடு இருந்திருந்தால் தனது தம்பி விஜய்க்காக மறுக்காமல் படத்தில் நடித்துக் கொடுத்திருப்பார்" எனச் சொல்லி நெகிழ்ந்துள்ளார். தேர்தல் முடிந்த பிறகு நடிகர் விஜயும் இது தொடர்பாக பிரேமலதாவை நேரில் சந்திக்க இருக்கிறாராம்.

விஜய் ஹீரோவாக மக்கள் மத்தியில் புகழ்பெறப் போராடிய சமயத்தில் அவருடைய 'செந்தூரப்பாண்டி' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து கைகொடுத்தது விஜயகாந்த்தான். இப்போது அவர் மறைந்தும் விஜய் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் வருகிறார்.


Next Story