வீட்டில் தனியாக இருந்த போது தவறாக நடக்க முயன்றதால் வெட்டி கொலை செய்தோம்; இளம்பெண் வாக்குமூலம்


வீட்டில் தனியாக இருந்த போது தவறாக நடக்க முயன்றதால் வெட்டி கொலை செய்தோம்; இளம்பெண் வாக்குமூலம்
x
தினத்தந்தி 24 Oct 2017 11:00 PM GMT (Updated: 24 Oct 2017 7:45 PM GMT)

வீட்டில் தனியாக இருந்த போது தவறாக நடக்க முயன்றதால், கணவருடன் சேர்ந்து வாலிபரை வெட்டி கொலை செய்தோம் என்று கைதான இளம்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சூலூர்,

மதுரை மாவட்டம் அரசரடியை சேர்ந்தவர் கரிகாலன் (வயது 31). இவர் தனது நண்பரான சேதுராமனுடன் கோவையை அடுத்த சூலூர் அருகே குளத்தூரில் வசித்து வந்தார். கடந்த 21–ந் தேதி இரவு கரிகாலன் தனது மனைவி சுகந்தியை (19) அந்த வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்தார். கடந்த 22– ந் தேதி கரிகாலன் வெளியே சென்றுவிட்டார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சுகந்தியிடம், குடிபோதையில் இருந்த சேதுராமன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய கரிகாலனிடம் நடந்த சம்பவத்தை சுகந்தி கூறி அழுதார். உடனே அவர் நண்பரின் மனைவியிடமே நீ இவ்வாறு செய்யலாமா என்று கேட்டார். இதனால் அவர் களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கரிகாலன் அங்கு கிடந்த அரிவாளால் சேதுராமனை வெட்டி கொலை செய்துவிட்டு தனது மனைவியுடன் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகந்தியை கைது செய்தனர்.

இது குறித்து சுகந்தி அளித்த வாக்குமூலம் வருமாறு:–

நான், ஈரோடு மாவட்டம் கோபி அருகே சூரியம்பாளையத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். நான் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கரிகாலனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனது கணவர் அடிக்கடி வெளியூர் சென்று தங்குவது வழக்கம். அவர் தான் தங்கும் இடத்தை கூறியதும், நான் அங்கு சென்று தங்குவேன்.

கடந்த 21–ந் தேதி எனது கணவர் போன் செய்து, சூலூர் அருகே குளத்தூரில் தங்கி இருப்பதாக என்னிடம் கூறினார். எனவே நான் எனது கணவர் தங்கி இருந்த வீட்டிற்கு வந்தேன். அங்கு அவருடைய நண்பர் சேதுராமனும் இருந்தார்.

அடுத்த நாள் எனது கணவர் கடைக்கு சென்றார். அப்போது தனியாக இருந்த என்னிடம் சேதுராமன் தவறாக நடக்க முயன்றார். இது குறித்து எனது கணவரிடம் தெரிவித்தேன். அவர் சேதுராமனிடம் கேட்ட போது தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த என் கணவர் அவரை கொன்று விடுவோம் என்று கூறினார்.

அதன்படி, குடிபோதையில் வீட்டில் படுத்திருந்த சேதுராமனின் கைகளை நான் பிடித்துக் கொண்டேன். எனது கணவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சேதுராமன் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை போர்வையில் சுற்றிக்கட்டி வெளியே போட்டு விடலாம் என்று நினைத்தோம். அப்போது வீட்டின் உரிமையாளர் வந்து விட்டதால் தப்பி ஓடி விட்டோம். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கைதான சுகந்தியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கரிகாலனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story