பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2017 11:00 PM GMT (Updated: 8 Nov 2017 9:26 PM GMT)

பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து புதுக்கோட்டையில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டமும், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு ஒப்பாரி வைத்து நூதன போராட்டமும் நடந்தது.

புதுக்கோட்டை,

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி அதிரடியாக அறிவித்தது. இதனால், பொதுமக்கள் அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மத்திய அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்தது. இதையொட்டி நேற்று, கருப்பு தினமாக கடைபிடித்து எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுபோல், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இதன் ஒருபகுதியாக வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் அக்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரகுபதி தலைமை தாங்கினார். இதில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், டாக்டர் முத்துராஜா, மாவட்ட செயலாளர் நைனாமுகமது மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ஒடுகம்பட்டி முருகேசன், முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை.திவ்யநாதன், பெனட்அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 8-ம்தேதி மத்திய அரசால் பணமதிப்பு இழப்பு செய்தபோது ஏ.டி.எம். வாசலில் பணத்தை எடுக்க முடியாமல் வரிசையில் நின்ற போது அதிர்ச்சியில் இறந்து போன பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று இரவு புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. பின்னர் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பின்பு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செங்கோடன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன போராட்டம் நடத்தினர். மாநில இளைஞரணி தலைவர் நியாஸ் அகமது தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் யூசுப்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்ட கோஷம் எழுப்பட்டன.

இதேபோல மணமேல்குடி புதிய பஸ் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மணமேல்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் நிலையூர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல ஆவுடையார்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியினர் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் காங்கிரஸ் மாநில விவசாய அணி துணை தலைவர் செல்வரெத்தினம் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் வட்டாரதலைவர்கள் தெற்கு கூடலூர் முத்து, வடக்கு விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய தலைவர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு துணை தலைவர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் தர்மதங்கவேல் தலைமை தாங்கினார். இதில் நரேந்திர மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பட்டது. இதில் நகர தலைவர்கள் சக்திவேல், முத்துமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரிமளம் வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் அரிமளத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டார தலைவர் ராம.வடிவேல் தலைமையில் தாங்கினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் முகமது இப்ராகிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story