ஸ்ரீநகர் பள்ளியில் துப்பாக்கி சத்தம் நின்றது, 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்


ஸ்ரீநகர் பள்ளியில் துப்பாக்கி சத்தம் நின்றது, 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2017 7:45 AM GMT (Updated: 25 Jun 2017 7:45 AM GMT)

ஸ்ரீநகர் பள்ளியில் துப்பாக்கி சூடு சத்தம் நின்று உள்ளது. பள்ளியில் பதுங்கியிருந்த இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்ரீநகர்,

 காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் பந்தாசவுக் அருகே ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) நேற்று மாலையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி மற்றும் தானியங்கி ஆயுதங்களால் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பினர். இதில் சப்–இன்ஸ்பெக்டர் சகிப் சுக்லா உயிரிழந்தார். காயம் அடைந்த மற்ற 2 வீரர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் விரைந்தனர். பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் இறங்கியது. இதற்கிடையே பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்த அரசு பள்ளிக்குள் நுழைந்தனர். பள்ளியிலிருந்து மாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேறிய பின்னர் பயங்கரவாதிகள் அங்கு தஞ்சம் அடைந்தனர். பள்ளிக்குள் பயங்கரவாதிகள் பதுங்கியது ராணுவத்திற்கு தெரியவந்தது. ராணுவம் பள்ளியை சுற்றி வளைத்ததும் அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இருதரப்பு இடையேயும் பயங்கர துப்பாக்கி சண்டை தொடங்கியது. 

தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் இரு பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பாதுகாப்பு படையினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 6 மணி நேரங்களுக்கு மேலாக துப்பாக்கி சண்டை நடைபெற்ற இடத்தில் துப்பாக்கி சூடு சத்தம் நின்று உள்ளது. இதற்கிடையே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டுவிட்டனர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

“துப்பாக்கி சண்டையானது நின்றுவிட்டது. பள்ளியில் உள்ள அறைகளில் சோதனை பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என மூத்த போலீஸ் அதிகாரி கூறிஉள்ளார். 

பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே சண்டை நடைபெற்ற ஸ்ரீநகர் டெல்லி அரசுப் பள்ளியில் 400 அறைகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story