மனைவியுடன் மட்டும் தாம்பத்தியம் கொள்ள முடியாத கணவர்... விவாகரத்து வழங்கி கோர்ட்டு உத்தரவு


மனைவியுடன் மட்டும் தாம்பத்தியம் கொள்ள முடியாத கணவர்... விவாகரத்து வழங்கி கோர்ட்டு உத்தரவு
x

மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வதில் நாட்டமில்லை என்று கணவர் கூறியதால் இளம் கோடிக்கு விவாகரத்து வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் தனக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதன் பிறகு வெறும் 17 நாட்களில் தனது கணவரை பிரிந்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் தனது கணவர் தன்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட மறுப்பு தெரிவித்துவிட்டார் என அந்த பெண் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். தனது கணவருக்கு தன்னுடன் உறவு கொள்வதில் நாட்டமில்லை எனவும், இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இருவராலும் ஒன்றிணைய முடியவில்லை என்றும் அப்பெண் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது அந்த பெண்ணின் 27 வயது கணவர் தாக்கல் செய்த பதில் மனுவில், தனது மனைவியுடன் மட்டுமே தன்னால் தாம்பத்தியம் கொள்ள முடியவில்லை என்றும் மற்றபடி தனக்கு எந்த குறைபாடும் இல்லை என்றும் விளக்கமளித்திருந்தார். மேலும் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை விரும்பவில்லை என்றும் அந்த நபர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம், விவாகரத்து கோரிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அந்த நபர் மும்பை ஐகோர்ட்டு அவுரங்காபாத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும் தங்கள் உத்தரவில், "திருமணத்திற்குப் பிறகு மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஒன்றிணைய முடியாத இளம் தலைமுறையினருக்கு இது ஒரு எடுத்துக்காட்டான வழக்கு. குறிப்பிட்ட ஒரு நபருடன் மட்டும் தாம்பத்தியம் கொள்ள முடியவில்லை என்பது பொதுவான ஆண்மைக் குறைவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

ஒரு நபர் உடலுறவு கொள்ளும் திறன் கொண்டவராக இருந்தாலும், மனைவியுடன் அதைச் செய்ய இயலாத சூழ்நிலையில் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள் இருக்கலாம்.

இந்த வழக்கில் கணவருக்கு மனைவியுடன் உறவு கொள்வதில் நாட்டம் ஏற்படவில்லை என்பது தெரியவருகிறது. இதை அந்த கணவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் இவர்களது திருமணம் பூர்த்தியாகவில்லை. இந்த இளம் ஜோடி எதிர்கொண்டு வரும் விரக்தியை நாம் புறக்கணிக்க முடியாது" என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story