பா.ஜ.க. வாய்ப்பு மறுத்த நிலையில் தொகுதி மக்களுக்கு வருண் காந்தி நெகிழ்ச்சி கடிதம்


பா.ஜ.க. வாய்ப்பு மறுத்த நிலையில் தொகுதி மக்களுக்கு  வருண் காந்தி நெகிழ்ச்சி கடிதம்
x

பா.ஜ.க. வின் முன்னணி தலைவராக இருந்த வருண் காந்திக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிலிபித் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கடந்த 2009, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர் வருண் காந்தி. 2014-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இவரது தாய், மேனகா காந்தி 2019-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிலிபித் தொகுதியின் உறுப்பினராக உள்ள வருண் காந்திக்கு இம்முறை போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்குப் பதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு காலத்தில் பா.ஜ.க. வின் முன்னணி தலைவராக இருந்த வருண் காந்திக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை வருண் காந்தி விமர்சனம் செய்ததால்தான், அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது தொகுதி மக்களுக்கு வருண் காந்தி உருக்கமாக ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், "பிலிபித் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் எனது பதவிக்காலம் முடிவடைகிறது. எம்.பி.யாக உங்களுடனான தொடர்பு முடிவுக்கு வரலாம். ஆனால், ஒரு மனிதனாக எனது கடைசி மூச்சு வரை உங்களுடன் இருப்பேன். பிலிபித் மக்கள் அற்புதமானவர்கள்.

இந்த தொகுதியில் எம்.பி.யாக அவர்களுக்கு பணியாற்றியதில் திருப்தி அடைகிறேன். எனது பதவிக் காலத்தில் பிலிபித்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். ஆனால்,எனக்கு இந்த முறை அதிர்ஷ்டம் இல்லை இனி நான் உங்களோடு எம்.பியாக இருக்க மாட்டேன். ஆனால், நான் கடைசி வரை உங்கள் மகனாக இருப்பேன். உங்களுக்காக என் வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். இப்போது நான் உங்கள் ஆசீர்வாதத்தை மட்டுமே கேட்கிறேன்" என்று அதில் எழுதியுள்ளார்.


Next Story