பணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுப்பு


பணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுப்பு
x

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க ராஞ்சி சிறப்பு கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்து வந்த ஹேமந்த் சோரன் அரசு நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதாக கூறி அமலாக்கத்துறை அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. இதில் நடந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இதில் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கு முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். கைது செய்யப்பட்டு உள்ள ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், தனது பெரியப்பாவின் இறுதி சடங்கில் பங்கேற்க 13 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சிறப்பு நீதிபதி ராஜீவ் ரஞ்சனின் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதனால் ஹேமந்த் சோரன் தனது பெரியப்பாவின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஷிபு சோரனின் மூத்த சகோதரரும், ஹேமந்த் சோரனின் பெரியப்பாவும் ஆன ராஜா ராம் சோரன் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story