தீபாவிற்கு ஆதரவாக புரட்சி மலர் தீபா பேரவை தொடக்கம் உறுப்பினர்கள் சேர்ப்பு தீவிரம்


தீபாவிற்கு ஆதரவாக புரட்சி மலர் தீபா பேரவை தொடக்கம்  உறுப்பினர்கள் சேர்ப்பு தீவிரம்
x
தினத்தந்தி 7 Jan 2017 7:36 AM GMT (Updated: 7 Jan 2017 7:36 AM GMT)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அரசியலில் குதிக்க உள்ளார்.அவருக்கு ஆதர்வாக புரட்சி மலர் தீபா பேரவை தொடங்கபட்டு உள்ளது.

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அரசியலில் குதிக்க உள்ளார். இதையடுத்து சென்னை தியாகராயர்நகர் சிவஞானம் தெருவில் உள்ள அவருடைய வீட்டிற்கு தினமும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு பகுதியினர் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்றும் தொண்டர்கள் வந்திருந்தனர். ஆனால் பகல் வேளையில் தீபா வீட்டில் இல்லை. அவருடைய கணவர் மாதவன் மட்டும் இருந்தார். இதையடுத்து தொண்டர்கள் அவரை சந்தித்து, தீபாவுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து சென்றனர்.

இதற்கிடையே நேற்று மாலை தீபா வீட்டில் இருந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக வந்தவர்கள் அவரிடம், ‘ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்து சென்றனர்.

தீபா வீட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வருபவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குவதற்காக அவர்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, தீபா ஆகியோர் படத்துடன் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தீபாவுக்கு ஆதரவாக, 'அம்மா ஜெயலலிதா தீபா பேரவை' என்ற பெயரில் பேரவை துவங்கி, 21 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பகுதியிலும் தீபா பேரவை பிளக்ஸ் போர்டுகள் வைக்க துவங்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் தீபா பேரவை என்ற அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. விவேக் என்பவர் இந்த பேரவையை தொடங்கி உள்ளார்.ராமநாதபுரம்  மாவட்டம் கீழக்கரையில் புதிதாக “புரட்சிமலர் தீபா பேரவை” என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நத்தம், பண்ணுவார்பட்டி பகுதிகளில் தீபாவை ஆதரித்து போஸ்டர்களும், குட்டுபட்டியில் பேனர்களும் வைக்கப்பட்டன.
நேற்று அம்மா ஜெ.தீபா பேரவை உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்கான படிவங்கள் அச்சிடப்பட்டு நத்தம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளுக்கும் வினி யோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் என பலரும் ஆர்வமுடன் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளான ஜனவரி 17-ந்தேதி அரசியல் களத்தில் இறங்கலாமா? அல்லது ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி இறங்கலாமா? என்பது குறித்து தீபா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், சென்னையில் ஜெயலலிதா .தீபா பேரவை அலுவலகம் திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்கிறார் தீபா

Next Story