50 ஆயிரத்து 170 பேருக்கு ரூ.1,580 கோடியில் ‘கான்கிரீட்’ வீடுகள் திட்டத்தை முதல்–அமைச்சர் தொடங்கி வைத்தார்

50 ஆயிரத்து 170 பேருக்கு ரூ.1,580 கோடியில் ‘கான்கிரீட்’ வீடுகள் திட்டத்தை முதல்–அமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னை
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பேரூராட்சி பகுதிகளில் வாழும் சொந்த குடியிருப்பு வசதி இல்லாத பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
2016–17–ம் ஆண்டில் 329 பேரூராட்சி பகுதிகளில் வாழும் பொருளாதாரத்தில் நலிந்த 50 ஆயிரத்து 170 பயனாளிகளுக்கு, ஒரு வீட்டிற்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.1,580 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில், கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக, முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச்செயலகத்தில், 5 பயனாளிகளுக்கு பணிக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story






