பட்டாசு ஆலை வெடிவிபத்து: போர்மென் கைது


பட்டாசு ஆலை வெடிவிபத்து: போர்மென் கைது
x
தினத்தந்தி 10 May 2024 1:13 AM GMT (Updated: 10 May 2024 6:19 AM GMT)

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 57). அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன.

நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆலையின் ஒரு அறையில் பேன்சி ரக வெடிகள் தயாரித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

அந்த அறையில் இருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியது. அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதம் அடைந்தன. 8 அறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாயின.

இந்த பயங்கர வெடி விபத்து குறித்த தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதில் பெண்கள், ஆண்கள் என மொத்தம் 10 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் சிலர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த பட்டாசு ஆலையை சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், தாசில்தார் வடிவேல் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பட்டாசுகளின் உராய்வின் காரணமாகவே இந்த வெடி விபத்து நடந்து இருக்கலாம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் மற்றும் போர்மென் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக போர்மென் சுரேஷ் பாண்டியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகவுள்ள ஆலை உரிமையாளர் சரவணன் மற்றும் ஒப்பந்ததாரர் முத்து கிருஷ்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story