செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப்.4ம் தேதிக்கு தள்ளிவைப்பு


செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப்.4ம் தேதிக்கு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 28 March 2024 7:50 AM GMT (Updated: 28 March 2024 8:36 AM GMT)

செந்தில் பாலாஜியின் புதிய மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், 28-ந் தேதி (இன்று) தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். இந்தநிலையில், அதே கோர்ட்டில் செந்தில்பாலாஜி நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை அளிக்க வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த ஆவணங்கள் கிடைத்த பின்பு அதன் அடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்' என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் மாதம் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story