ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே வெடி குண்டு தாக்குதல்

ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்துக்கு அருகே வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார்.
டார்ட்முண்டு,
ஜெர்மனியில் உள்ள டார்ட்முண்டு நகரில் பொருசியா டார்ட்முண்டு கால்பந்து வீரர்களின் பேருந்துக்கு அருகே மூன்று முறை குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் கால்பந்தாட்ட வீரர்கள் சென்ற பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாகவும், அந்த அணியின் டிஃபென்டர் மார்க் பர்த்ரா என்பவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் செய்தித் தொடர்பாளர் குன்னார் வொர்ட்மான் தெரிவித்தார்.
இன்ற நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் மொனாகோவுக்கு எதிராக விளையாடுவதற்காக, விடுதியில் இருந்து, வீரர்களுடன் பேருந்து புறப்பட்ட போது, திடீரென குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பை அடுத்து இன்று நடைபெறவிருந்த கால்பந்து போட்டி நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ப்ரீமியர் கிளப் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கால்பந்து மைதானத்தின் செய்தித் தொடர்பாளர் நார்பர்ட் டிக்கெல் கூறும்போது, இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்படுகிறது. மைதானம் குறித்து ரசிகர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. மேலும் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டார்டுமண்ட் கால்பந்து அணியினரை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என கருதுவதாக ஜெர்மன் போலீசார் தெரிவித்தனர். மேலும், தாக்குதல் நடைபெற்ற இடத்தின் அருகே ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டது. இந்த கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story






