இந்திய ராணுவம்தான் எல்லையை தாண்டியது சீனா குற்றச்சாட்டு


இந்திய ராணுவம்தான் எல்லையை தாண்டியது சீனா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 Jun 2017 3:53 AM GMT (Updated: 27 Jun 2017 3:53 AM GMT)

சிக்கிம் செக்டாரில் இந்திய ராணுவம்தான் எல்லையை தாண்டியது என சீன ராணுவம் குற்றம் சாட்டிஉள்ளது.


பெய்ஜிங்,


பாகிஸ்தானைப் போல் மற்றொரு அண்டை நாடான சீனாவும் ஏதாவது ஒரு வகையில் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்துக்கு சீனா அநியாயமாக உரிமை கொண்டாடி வருகிறது. 

சீன ராணுவம் அவ்வபோது இந்திய நிலைகளுக்கு ஊடுருவதும், இந்திய ராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கவும் திரும்பி செல்லும் சம்பவங்கள் முன்னதாக நிகழ்ந்து உள்ளது. இவ்வரிசையில் சிக்கிம் மாநிலத்தில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளது. சிக்கிமின் தோகா லா பகுதியில் இந்த மோதலான போக்கானது கடந்த 10 நாட்களாக தொடர்ந்து வருவதாக தெரிகிறது. 

கைலாச மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்பவர்களை சீன ராணுவம் தடுத்து நிறுத்தி உள்ளது. இதற்கிடையே ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் மேலும் முன்னேறி வராமல் தடுக்க இந்திய ராணுவம் கடினமாக போராடி வருகிறது. சீன ராணுவத்தை தடுக்க இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஒரு மனித சங்கிலியை ஏற்படுத்தி உள்ளது. சீன ராணுவம் இந்த சம்பவங்களை வீடியோ எடுத்து உள்ளது, போட்டோக்களையும் எடுத்து உள்ளது. தோகா லா பகுதியில் இரண்டு பதுங்கு குழிகளை சீன ராணுவம் அழித்து உள்ளது. இருதரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே கடந்த 20-ம் தேதி கொடி கூட்டம் நடந்து உள்ளது, 

ஆனால் கூட்டத்தில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. தோகா லா பகுதியில் சீன ராணுவம் இதுபோன்ற ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது இது முதல் முறை கிடையாது. தோகா லா பகுதியானது சிக்கிம், பூடான் - திபெத்தை எல்லையில் அமைந்து உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டும் சீன ராணுவம் இந்திய ராணுவத்தின் பதுங்கு குழியை அழித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிக்கிம் செக்டாரில் இந்திய ராணுவம்தான் எல்லையை தாண்டியது என சீன ராணுவம் குற்றம் சாட்டிஉள்ளது. சீன வெளியுறவுத்துறை நேற்று இரவு வெளியிட்டு உள்ள அறிக்கையில், சீனா - இந்தியா எல்லையில் சிக்கிம் செக்டாரில் இந்திய ராணுவம் தான் எல்லையை தாண்டி சீனாவிற்குள் வந்தது என குற்றம் சாட்டிஉள்ளது. இந்தியா, தன்னுடைய ராணுவத்தை எல்லையில் திரும்ப பெற வேண்டும் எனவும் முழுமையான விசாரணை இச்சம்பவம் தொடர்பாக நடத்த வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தி உள்ளது. 

எல்லையில் சீனாவின் டோங்லாங் பகுதியில் சாலை பணிகள் நடைபெற்று வந்ததை இந்திய ராணுவம் சமீபத்தில் தடுத்தது. சீன ராணுவம் சாலை பணிகளை மேற்கொள்வது என்பது எங்களுடைய இறையாண்மைக்கு உள்பட்ட நடவடிக்கையாகும், இதில் இந்தியா தலையிட உரிமை கிடையாது என்று சீனா கூறிஉள்ளது. 


Next Story