பாகிஸ்தான் தலைநகரில் பதற்றம் ரப்பர் குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு


பாகிஸ்தான் தலைநகரில் பதற்றம் ரப்பர் குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2017 8:12 PM GMT (Updated: 25 Nov 2017 8:12 PM GMT)

பாகிஸ்தான் சட்ட மந்திரி ஜாகித் ஹமீது, தேர்தலின்போது வேட்பாளர்கள் மத அடிப்படையில் செய்து கொள்ள வேண்டிய பிரமாணம் தொடர்பான திருத்தம் ஒன்றை அவசர கதியில் கைவிட்டதாக கூறப்படுகிறது.

இஸ்லாமாபாத்,


இதனால் அவர் பதவி விலகக்கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஒரு வார காலமாக தெஹ்ரிக் இ லபாயிக் ரா ரசூல் அல்லா அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு வந்தனர். இதனால் இஸ்லாமாபாத் முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காததால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அதிருப்தி அடைந்து அரசின்மீது கடும் கண்டனம் தெரிவித்தன.

இதன்காரணமாக நேற்று 8 ஆயிரத்து 500 அதிரடிப்படை போலீசாரும், துணை ராணுவத்தினரும் அங்கு விரைந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது அவர்கள் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வெடித்து விரட்டியடித்தனர்.

ஆனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

Next Story