முதலாவது டெஸ்ட்: வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இலங்கை


முதலாவது டெஸ்ட்: வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இலங்கை
x

image courtesy: ICC

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

சில்ஹெட்,

வங்காளதேசம் -இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 280 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தனஞ்சயா டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்தினர். வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கலீத் அகமது மற்றும் நஹித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம், இலங்கை அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 188 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 47 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் விஷ்வா பெர்னண்டோ 4 விக்கெட்டுகளும், கசூன் ரஜிதா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

பின்னர் 92 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 418 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் சிறப்பாக ஆடிய கமிந்து மெண்டிஸ் 164 ரன்னும், டி சில்வா 108 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம், இலங்கை அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 182 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 328 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது. வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 87 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கசுன் ரஜிதா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


Next Story