பழனியில் வைகாசி விசாகத் திருவிழா.. 16-ம் தேதி கொடியேற்றம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21-ம் தேதி திருக்கல்யாணமும், 22-ம் தேதி வைகாசி விசாக தேரோட்டமும் நடைபெறுகிறது.

Update: 2024-05-03 07:45 GMT

பழனி:

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா அறுபடை வீடுகளில் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான விசாகத் திருவிழா வருகிற 16-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி,  தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்க குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 21-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மறுநாள் 22-ம் தேதி மாலை 4.30 மணிக்கு வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வீனை இன்னிசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

அக்னி நட்சத்திர கழு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அக்னி நட்சத்திரக் கழு சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் கடைப்பிடிக்கப்படும். இந்த நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தர்கள் பழனி மலையை சுற்றியுள்ள வீதிகளில் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திர கழு வருகிற 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்நாட்களில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்