

புதுச்சேரி
அமெரிக்க டாலர் வாங்கித்தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.21 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரிப்டோ கரன்சி
புதுச்சேரி ஆனந்த ரங்கபிள்ளை நகரை சேர்ந்தவர் ஜெயரட்சகன் (வயது46). இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தற்போது புதுச்சேரியில் ஆன்லைனில் முதலீடு செய்யும் தொழில் செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் கிரிப்டோ கரன்சி வாங்குவதற்காக 'பினான்ஸ்' என்ற நிறுவனத்தில் அமெரிக்க டாலர்களை வாங்குவதற்கு முயற்சி செய்தார்.
ரூ.21 லட்சம் மோசடி
இதற்கிடையே அவரது வாட்ஸ் அப் எண்ணில் தென்னிந்தியாவிற்கான பினான்ஸ் கம்பெனியின் நிர்வாகி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு ஒருவர் பேசினார். அவரிடம் ஜெயரட்சகன் தனக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும் என கேட்டு இருக்கிறார். இதற்காக பல்வேறு தவணைகளாக ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி வைத்தார்.
பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர், ஒரு மாதம் மேலாகியும் ஜெயரட்சகனுக்கு எந்த அமெரிக்க டாலரும் கொடுக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.