லிப்டில் சிக்கி 3 பேர் தவிப்பு

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் லிப்டில் 3 பேர் சிக்கி தவித்தனர்.
லிப்டில் சிக்கி 3 பேர் தவிப்பு
Published on

கோட்டுச்சேரி

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் லிப்டில் 3 பேர் சிக்கி தவித்தனர்.

அரசு ஆஸ்பத்திரி

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நோயாளிகள், பொதுமக்கள் வசதிக்காக லிப்ட் வசதி உள்ளது.

இந்த லிப்ட் அடிக்கடி பழுதாகி நோயாளிகள், டாக்டர்கள், செவிலியர்கள் சிக்கிக்கொள்வது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

3 பேர் சிக்கினர்

இந்த நிலையில் இன்று மாலை பார்வையாளர்கள் நேரத்தில் நோயாளிகளை பார்க்க அவர்களது உறவினர்கள் வந்தனர். அப்போது அவரச பிரிவுக்கு எதிரே இருக்கும் லிப்ட் மின் தடையால் திடீரென்று பாதியில் நின்றது. அப்போது லிப்டுக்குள் குழந்தையுடன் 2 பேர் இருந்தனர்.

உடனடியாக ஜெனரேட்டர் இயங்காததால், லிப்டுக்குள் இருந்த குழந்தை உட்பட 3 பேர் பரிதவித்தனர். இதை பார்த்து, லிப்டுக்கு வெளியில் இருந்த உறவினர்கள், நோயாளிகள் கூச்சலிட்டனர்.

பத்திரமாக மீட்பு

இந்த சத்தம் கேட்டு ஊழியர்கள் அங்கு ஓடிவந்தனர். பின்னர் ஊழியர்கள் சிலர் இரும்பு கம்பியை கொண்டு லிப்ட் கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு கதவு உடைக்கப்பட்டு, குழந்தை உள்பட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மின்தடையால் லிப்ட் பழுதாகி அதில் 3 பேர் சிக்கி தவித்த சம்பவம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com