கோழிப்பண்ணை நிறுவனத்தில் 5½ கோடி மோசடி

கோழிப்பண்ணை நிறுவனத்தில் 5கோடி மோசடி
கோழிப்பண்ணை நிறுவனத்தில் 5½ கோடி மோசடி
Published on

கோவை

கோழி பண்ணை நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி செய்த கேரள தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோழி பண்ணை நிறுவனம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை செம்மனாம்பதி ரோடு ஒடையகுளத்தில் கோழி பண்ணை நிறுவனம் உள்ளது.

இங்கு பொதுமேலாளராக பணியாற்றும் சிபிள் ஆல்பெட்டா (வயது 29) கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதில், கோழி பண்ணை நிறுவனத்தில் மண்டல மேலாளராக கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பிரதீப்குமார் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

அவர், வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் கோழிக்குஞ்சுகள், முட்டை மற்றும் கோழித் தீவனம் வாங்குதல், பண்ணை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்தார்.

ரூ.5 கோடி மோசடி

அங்கு அவருடைய மனைவி பிரமிளா, கடந்த 2010-ம் ஆண்டு முதல் கணக்காள ராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நிறுவன கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது.

இதில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து, கோழி குஞ்சு மற்றும் முட்டைகளை அதிக விலைக்கு விற்று விட்டு குறைந்த விலைக்கு விற்றதாக போலி ரசீது மூலம் கணக்கு காண்பித்தும்,

குறைந்த விலைக்கு வாங்கிய கோழித் தீவனங்களை அதிக விலையில் வாங்கியதாகவும், பண்ணை பராமரிப்பு செலவுகளை கூடுதலாக கணக்கு காட்டி கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஏமாற்றி வந்து உள்ளனர்.

தம்பதி மீது வழக்கு

இதன் மூலம் அவர்கள் ரூ.5 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

எனவே நிறுவனத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி மோசடி செய்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அதன் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த பிரதீப்குமார், அவரு டைய மனைவி பிரமிளா ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com