'நான் சில விளக்கங்களை தர கடமைப்பட்டுள்ளேன்' - பருத்திவீரன் விவகாரத்தில் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த பொன்வண்ணன்


நான் சில விளக்கங்களை தர கடமைப்பட்டுள்ளேன் - பருத்திவீரன் விவகாரத்தில் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த பொன்வண்ணன்
x
தினத்தந்தி 27 Nov 2023 6:49 AM GMT (Updated: 27 Nov 2023 10:00 AM GMT)

பருத்திவீரன் திரைப்பட விவகாரத்தில் அமீருக்கு ஆதரவாக இயக்குனர் பொன்வண்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாக பிரச்சினை நடந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத் துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, 'நான் இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் கார்த்தியுடன் இணைந்து 'ராம்' திரைப்படம் பார்க்க சென்றேன். அப்போது சுதா கொங்கரா ராம் படத்தின் மேக்கிங் சரியில்லை என்று என்னிடம் சொன்னார்' என்று பேசியிருந்தார்.

அவரின் இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இயக்குனர் சுதா கொங்கரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு விளக்கம் அளித்திருந்தார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ள நிலையில் அமீருக்கு ஆதரவாக இயக்குனர் பொன்வண்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் இந்த விவகாரத்தில் 'நான் சில விளக்கங்களை தர கடமைப்பட்டுள்ளேன்' என்று தெரிவித்து அமீருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் அந்த பதிவில், 'பருத்தி வீரன் திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியை பார்த்தேன். அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன்.

அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை. அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கியபோது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நான் அறிவேன்.

பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார். நானும்,உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளை சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதானபடுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் ... ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார்.

பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்ப்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. இதனால்தான்,பணத்துக்காக தனது ''படைப்பிற்கு'' என்றும் துரோகம் செய்பவர் அல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும்.

படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கு கிடைத்த 'தேசிய விருது'' அங்கீகாரங்களாலும் அது பெற்ற இடமோ உயரியது.

படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் .

உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக ..திருடன், வேலைதெரியாதவர்.. என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டி முழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது..! தங்கள் தயாரிப்பில் வந்த 'இருட்டறையில் முரட்டுக்குத்து' திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதன் படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ..! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!

இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சினைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்கும் இடையே இருந்த நட்பும், உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற ஆசைகளுடன்.. பிரியங்களுடன் பொண்வண்ணன்' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story