

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. இதைத்தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் எஸ்எஸ்எம்பி29 படத்தை இயக்கவுள்ளார்.
மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. மேலும் இந்த படம் ஆக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மூன்று பாகங்களாக உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.