திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 15 Sep 2018 9:30 PM GMT (Updated: 15 Sep 2018 8:34 PM GMT)

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

தென்திருப்பேரை,

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆவணி திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் 8-வது தலமான திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் வைத்தமாநிதி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5-ம் திருநாள் இரவில் கருடசேவை நடந்தது. 10-ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 6.40 மணிக்கு வைத்தமாநிதி பெருமாள் தேரில் எழுந்தருளினார்.

தேரோட்டம்

காலை 9.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்று பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து இழுத்தனர்.

கோவில் முன்பு கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்ட தேரானது தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக காலை 10.50 மணிக்கு மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.

விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத், டி.வி.எஸ். அறக்கட்டளை ஆலோசகர் கசங்காத்த பெருமாள், வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்.

இன்று, தீர்த்தவாரி

ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவின் நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Next Story