தேர்வு பயத்தால் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


தேர்வு பயத்தால் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Nov 2018 10:15 PM GMT (Updated: 17 Nov 2018 9:40 PM GMT)

தேர்வு பயத்தால் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தஞ்சாவூர்,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரகு. இவருடைய மகன் பாலாஜி(வயது 19). இவர் தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.ஏ., எல்.எல்.பி. என்ற ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப்படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழகம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்து பாலாஜி தினமும் பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று விடுதி அறையில் பாலாஜி மட்டும் தனியாக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருடைய நண்பரான முகிலன் என்பவர் பாலாஜியை சந்தித்து அவருடன் சேர்ந்து தேர்வுக்காக படிக்க வந்துள்ளார். அப்போது விடுதி அறை கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதையடுத்து கதவை பூட்டிக்கொண்டு பாலாஜி தூங்கிக்கொண்டு இருக்கலாம் என கருதி அவரது பெயரை கூறி அழைத்தபடி கதவை முகிலன் தட்டினார். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. பாலாஜியின் செல்போனுக்கு முகிலன் தொடர்பு கொண்டபோது அறைக்குள் இருந்து செல்போன் சத்தம் கேட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த முகிலன் மற்ற நண்பர்கள் உதவியுடன் அறைக்கதவை திறந்து பார்த்தார். அப்போது பாலாஜி மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பாலாஜியின் குடும்பத்தினருக்கும், வல்லம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனியார் விடுதியில் பாலாஜியுடன் தங்கிருந்த மாணவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது பாலாஜி தங்கியிருந்த அறையில் இருந்து அவர் கைப்பட எழுதியிருந்த கடிதம் கிடைத்தது. அதில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் எழுதியிருந்தது. இதையடுத்து பாலாஜியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 12-ந் தேதி இதே பல்கலைக்கழக சட்டகல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் ஹரீஷ், பல்கலைக்கழக விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story