கொரோனாவின் தாக்கத்தை குறைக்க தீவிர பரிசோதனை; முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்


கொரோனாவின் தாக்கத்தை குறைக்க தீவிர பரிசோதனை; முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 April 2021 6:21 AM GMT (Updated: 8 April 2021 6:21 AM GMT)

கொரோனாவின் தாக்கத்தை குறைக்க உமிழ்நீர் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

முகக்கவசம் அணியாதது

புதுவையில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அதற்கு தேவையான நடவடிக்கையை மருத்துவ துறை எடுக்க வேண்டும்.

கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதற்கு மக்கள் பொது இடங்களில் நடமாடும் போது முக கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது, அடிக்கடி கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்யாமல் இருப்பது தான் காரணம். இது குறித்து அரசு சார்பில் பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

உமிழ்நீர் பரிசோதனை

கொரோனாவின் தாக்கத்தை குறைக்க உமிழ்நீர் பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். அப்போது தான் நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும். தற்போது அரசு சார்பில் செய்யப்படும் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும்.

நான் முதல்-அமைச்சராக இருந்த போது கொரோனா பரிசோதனை செய்ய முதல்-அமைச்சர் நிவாரண நிதியை பெற்று அதன் மூலம் பல்வேறு உபகரணங்கள் வாங்கி வைத்துள்ளோம். புதுவையில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது போல் பரிசோதனைகளையும் இலவசமாக செய்ய வேண்டும். தற்போது கொரோனாவின் 2-வது தாக்கம் வருகிறது. அதனை எதிர்கொள்ள நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story