ஆ.ராசாவின் மனைவி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்


ஆ.ராசாவின் மனைவி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 30 May 2021 2:01 AM GMT (Updated: 30 May 2021 2:01 AM GMT)

ஆ.ராசாவின் மனைவி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்.

சென்னை,

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாக பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசாவின் உயர்விலும், தாழ்விலும், நெருக்கடிகளிலும், சோதனைகளிலும் தோன்றாத்துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் பரமேஸ்வரி.

அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசாவின் கரங்களை பற்றி ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். பரமேஸ்வரியின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். ஆ.ராசா இந்த துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப தி.மு.க. தோள் கொடுத்து துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சு.திருநாவுக்கரசர் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், முன்னாள் எம்.பி. வா.மைத்ரேயன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story