மணல் குவாரி வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மணல் குவாரி வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 April 2024 9:54 AM GMT (Updated: 2 April 2024 10:36 AM GMT)

5 மாவட்ட கலெக்டர்களும் ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்யும் அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு செப்டம்பரில் தமிழகத்தில் 34 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மணல் குவாரிகளின் மொத்த ஏஜெண்டாக செயல்பட்டு வந்த தொழிலதிபர்கள் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 24 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகி குவாரிகள் தொடர்பாக விளக்கமளிக்க அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலர், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது சரியல்ல என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு மாவட்ட கலெக்டர்கள் தான் இதுகுறித்து மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் பணிகள் இருப்பதால் மாவட்ட கலெக்டர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் அளிக்க வேண்டும், அவர்களுக்கு பதிலாக கலெக்டர்களின் பிரதிநிதிகள் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட கலெக்டர்களும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 5 மாவட்ட கலெக்டர்களும் நேரில் ஆஜராகாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்துள்ளது.


Next Story