அங்கித் திவாரி மேல்முறையீடு: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


அங்கித் திவாரி மேல்முறையீடு: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 March 2024 7:56 PM GMT (Updated: 12 March 2024 3:14 AM GMT)

மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டு டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2018-ம் ஆண்டு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு வந்திருப்பதாக கூறி, மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதில் ரூ.20 லட்சத்தை நத்தம் அருகே வாங்கிய அவர், பின்னர் திண்டுக்கல்லில் வைத்து ரூ.20 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அங்கித் திவாரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் உத்தரவிட்டனர்.

மேலும், மேல்முறையீடு மனு மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story