விவசாயிகள் பேரணி எதிரொலி; டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்


விவசாயிகள் பேரணி எதிரொலி; டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்
x

டெல்லி முழுவதும் இன்று முதல் மார்ச் 12-ந்தேதி வரை ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

'டெல்லி நோக்கி பேரணி' என்ற பெயரில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்பட 200 விவசாய அமைப்புகளை சேர்ந்த 15 முதல் 20 ஆயிரம் விவசாயிகள் நாளை டெல்லி நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக, உத்தர பிரதேசம், சண்டிகர், பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள், 2 ஆயிரம் முதல் 2,500 டிராக்டர்களில் டெல்லி-நொய்டா எல்லையில் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்குவது, ஓய்வூதியம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்படுகிறது.

விவசாயிகளின் இந்த பேரணியை தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். டெல்லிக்கு அருகே உத்தர பிரதேசத்தின் திக்ரி எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரியானாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. செல்போன் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி-காசிப்பூர் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், டெல்லி முழுவதும் இன்று முதல் மார்ச் 12-ந்தேதி வரை ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. விவசாய அமைப்புகள் இன்று மாலை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன என கூறப்படும் சூழலில், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story