குடியரசு தின விழா: டெல்லி வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்


குடியரசு தின விழா: டெல்லி வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
x

பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுடெல்லி,

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு இந்தியா அழைப்பு விடுத்து இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட பிரான்ஸ் அதிபர் மேக்ரான், டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியா வந்தார்.

தனது குழுவினருடன் 2 நாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலம் வந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரானை, ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்-மந்திரி பஜன்லால் சர்மா ஆகியோர் வரவேற்றனர். இதன் பின்னர் மேக்ரான் தனது குழுவினருடன், மலை உச்சியில் அமைந்திருக்கும் ஆம்பர் கோட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களை சுற்றிப்பார்த்தார்.

இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாகரில் இருந்து பிரதமர் மோடியும் நேற்று மாலை விமானம் மூலம் ஜெய்ப்பூர் வந்தார். பின்னர் பிரான்ஸ் அதிபர் மேக்ரானை, பிரதமர் மோடி வரவேற்றார். இதையடுத்து இரு தலைவர்களும் திறந்த கார் ஒன்றில் ஊர்வலமாக சென்றனர். அந்த ஊர்வலம் ஜந்தர் மந்தரில் தொடங்கி, முக்கிய பகுதிகள் வழியாக ஹவா மகாலில் நிறைவடைந்தது.

இதன்பிறகு, பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று தலைநகர் டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் பிரான்ஸ் அதிபரை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார்.


Next Story