நலத்திட்டங்களை இலவசம் என்பது தவறு - சந்திரசேகர ராவ் கருத்து


நலத்திட்டங்களை இலவசம் என்பது தவறு - சந்திரசேகர ராவ் கருத்து
x

நலத்திட்டங்களை இலவசம் என்பது தவறு என்று தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

சுதந்திர தினத்தையொட்டி, தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் பேசியதாவது:-

மக்கள் நலன்தான் அரசுகளின் முக்கிய கடமை. ஆனால், அந்த கடமையை செய்யாத மத்திய அரசு, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களை 'இலவசம்' என்று சொல்கிறது. அப்படி சொல்வது தவறு.

மேலும், தற்போதைய மத்திய அரசு கூட்டாட்சி தத்துவங்களை சீர்குலைக்கிறது. மாநில அரசுகளை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த சதி செய்கிறது. மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய 41 சதவீத பங்கை 29.6 சதவீதமாக குறைத்துவிட்டது.

பொது பட்டியலில் உள்ள விவகாரங்களை மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது. தனது தவறுகளை மறைக்க வெறுப்பு அரசியல் மூலம் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறது என்று அவர் பேசினார்.


Next Story