ரூ. 200 கோடி பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்


ரூ. 200 கோடி பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்
x

ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஜாமினில் உள்ளார்.

டெல்லி,

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார்.

2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது சிறையில் உள்ள கணவருக்கு ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சுகேஷ் சந்திரசேகரை நடிகை ஜாக்குலினுக்கு அறிமுகம் செய்துவைத்த பிங்கி இராணி என்பவர் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை ஜாக்குலின், பிங்கி இராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விளக்கம் அளித்தும் வருகிறார்.

அந்த வகையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு பாட்டியாலா கோர்ட்டு ஜாமின் வழங்கியது. பின்னர், அந்த ஜாமின் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாகுலின் பெர்னாண்டஸ் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜராகியுள்ளார். டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜரான நடிகை ஜாகுலின் பெர்னாண்டசிடம் பண மோசடி தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story