வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நீக்கப்பட்ட 500 போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பணி


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நீக்கப்பட்ட 500 போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பணி
x
தினத்தந்தி 17 Dec 2022 6:45 PM GMT (Updated: 17 Dec 2022 6:46 PM GMT)

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நீக்கப்பட்ட 500 போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று பி.எம்.டி.சி. தலைவர் நந்தீஸ் ரெட்டி உறுதிபட தெரிவித்துள்ளார்.

சாந்திநகர்:

பெங்களூரு சாந்திநகரில் உள்ள பி.எம்.டி.சி. அலுவலகத்தில் நடைபெற்ற ராஜ்யோத்சவா நிகழ்ச்சியில் பி.எம்.டி.சி. வாரிய தலைவர் நந்தீஸ் ரெட்டி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த பணி நீக்கத்தை எதிர்த்து ஊழியர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டது. அதன்படி, 1,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டு இருந்தது. பி.எம்.டி.சி. போக்குவரத்து கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 500 ஊழியர்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாமல் உள்ளது. அந்த 500 ஊழியர்களுக்கும் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் பணி வழங்கப்படும். பி.டி.எம்.சி.க்காக புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட உள்ளது. பி.டி.எம்.சி. வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story