டைரக்டர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ்


டைரக்டர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ்
x
தினத்தந்தி 9 April 2024 8:14 AM GMT (Updated: 9 April 2024 8:35 AM GMT)

டைரக்டர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி,

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.

இதையடுத்து, ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் டைரக்டர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார்.

டைரக்டர் அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும் இருவரும் இணைந்து காபி ஷாப் ஒன்றை தொடங்கியதாகவும் தகவல் வெளியாகின. இதையடுத்து, டைரக்டர் அமீருக்கு நோட்டீஸ் அனுப்பிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணைக்கு 2ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. இந்த நோட்டீசையடுத்து, டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அமீர் நேரில் ஆஜரானார். பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைக்கு பின் டைரக்டர் அமீர் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், விசாரணைக்கு மீண்டும் ஆஜராகும்படி டைரக்டர் அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 3 ஆண்டுக்கான வங்கி பரிவர்த்தனை, வாங்கப்பட்ட சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களுடன் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அமீருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் உடன் தொழில் ரீதியில் கூட்டளியாக இணைந்தது எப்படி? என்ற விவரத்தையும் அமீரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கேட்டுள்ளது. அதேவேளை, விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் தரும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு டைரக்டர் அமீர் இமெயில் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story