நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன் 2-வது முறையாக சோனியா காந்தி ஆஜர்


நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன் 2-வது முறையாக சோனியா காந்தி ஆஜர்
x

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் சோனியா காந்தி நேரில் ஆஜராகியுள்ளார்.

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது. அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்ததால், அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா கடனாக கொடுத்தது.

அந்த கடனை அசோசியேட்டடு நிறுவனம் திருப்பிச் செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கிக்கொண்டது. இதன்மூலம் வெறும் ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், ரூ.90 கோடி கடனுக்காக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள், பங்குகளை பெற்றுக்கொண்டதாகவும் இதில் முறைகேடு இருப்பதாகவும் பாஜக சுப்ரமணியசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.

இதனிடையே, இந்த பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக ராகுல்காந்தியிடம் 5 நாட்கள் 50 மணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 21-ம் தேதி சோனியா காந்தி ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மீண்டும் விசாரணைக்கு 26-ம் தேதி ஆஜராகும்படி சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன் 2-வது முறையாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜரானார். காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்த சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அதேவேளை, சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறை அலுவலகம் முன் குவிந்த காங்கிரசால் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.


Next Story