ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 18 May 2023 5:57 AM GMT (Updated: 18 May 2023 9:50 AM GMT)

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதியில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதுதவிர சில மாவட்டங்களில் கோவில் விழாக்களையொட்டியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராடினர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு தொடர்பாக தீர்ப்பினை வாசித்த நீதிபதிகள், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டு போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன.

ஜல்லிக்கட்டினை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் இருந்த குறைகளை தமிழக அரசின் சட்டத்திருத்தம் சரி செய்துள்ளது.

தமிழக அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது. ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும்.

கலாச்சாரம் என்றாலும் துன்புறுத்தலை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் உறுதியாக பின்பற்றப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். போட்டிகளில் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டின் சட்டம் உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளனர்.


Next Story